திண்டுக்கல் அருகே மலைகளில் கனிமவளம் தொடர்பான மத்திய அரசின் ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளில் கனிமவளம் தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலைகளில் கனிமவளம் தொடர்பான மத்திய அரசின் ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை உடனே நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையில் கருமலை, ரெங்கமலை ஆகியவை உள்ளன. இந்த மலைப் பகுதிகளில் செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமவளங்கள் இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் நில அறிவியல்துறை அதிகாரிகள் இங்கு முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்காக 3 ஆயிரம் அடிவரை போர்வெல் அமைக்கும் பணிகள் ஆங்காங்கே போடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் தற்போது வேடசந்தூர் சுற்று வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
இத்தனை ஆயிரம் அடிக்கு போர்வெல் அமைத்தால் நிலத்தடி நீர் காணாமல் போகும் எனக் கூறி விவசாயிகள் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆய்வை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும் வேடசந்தூர் சுற்றுவட்டார மக்கள் நேற்று மனு அளித்துள்ளனர்.
ஏற்கெனவே ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லைகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில் அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்திலும் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை இருக்கிறது.