மோடி முகமூடி அணிந்தவர் காலில் விழுந்து கெஞ்சிய தமிழக விவசாயிகள்.. டெல்லியில் அவலம்
பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் நரேந்திர மோடியை போன்ற முகமூடி அணிந்த ஒருவரின் காலில் விவசாயிகள் விழுவது போன்ற போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர்.
டெல்லி: பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் நரேந்திர மோடியை போன்ற முகமூடி அணிவிக்கப்பட்ட ஒருவரின் காலில் விவசாயிகள் மொத்தமாக விழுவது போன்ற போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.
வறட்சி நிவாரணம் அதிகரிப்பு, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 16 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இவர்களது கோரிக்கைகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை நூதன முறையில் நடத்தி வருகின்றனர்.
மண்டை ஓடு
இந்நிலையில் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மண்டை ஓடுகளாக, மாறுவதை தடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கோரினர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தூக்குக் கயிறுகளுடன் போராட்டம் நடத்தினர்.
சடலமாக போராட்டம்
மேலும் ஒருவரை சடலமாக சித்தரித்து விவசாயிகளின் போராட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்தனர். எனினும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தபோது அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆயினும் இதுவரை இல்லை.
பாம்புக்கறி
விவசாயிகள் இன்று பாம்புக் கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் வாழ வழியின்றி பயிர்கள் சேதமடைவதால் எலி, பாம்பு உள்ளிட்ட கறிகளை சாப்பிடும் போராட்டத்தை நடத்துகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மோடி காலில்
இந்நிலையில் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கு மோடியின் முகமூடியை அணிவித்து அவரை விவசாயிகள் உட்கார வைத்தனர். அப்போது அவரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். பின்னர் மோடியின் காலில் விவசாயிகள் விழுவதை போன்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மனம் மாறாத மோடி
வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமிழக விவசாயிகளின் துயரங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி அவர்களோ விவசாயிகளை சந்திக்கக் கூட முன் வரவில்லை. எனினும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்று பிரதமர் மோடி கூறும்வரை இந்த போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.