பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு: தமிழக அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
தேனி: துணைக்குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழக அதிகாரியின் வாகனத்தை சிறைப்பிடித்து முல்லைப்பெரியாறு மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் தமிழக மற்றும் கேரள பிரநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவியாக மத்திய நீர்வள ஆணையத்தின் பொறியாளர் அம்பரீஷ் கரீஸ் கிரீஸ் தலைமையில் 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்த துணைக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள அரசு பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசனத்துறை பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவி செயற்பொறியாளர் பிரசீது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 5 பேர் கொண்ட துணைக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை பெரியாறு அணையில் கூடி ஆய்வு செய்து அதன் அறிக்கையை மூவர் குழுவிற்கு அனுப்பி வருகின்றனர்.
மூவர் குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மாதம் நாதன் தலைமையிலான மூவர் குழு ஆய்வு நடத்தியது. அதனைத் தொடர்ந்து தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் மழைக் காலங்களில் மாதம் இரு முறையும் தொடர் மழைக் காலங்களில் வாரம் ஒரு முறையும் ஆய்வு நடத்துமாறு துணைக் கண்காணிப்பு குழுவிற்கு மூவர் குழுவின் தலைவர் நாதன் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தமிழக அதிகாரிகள்
இதற்காக கூடலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் மாதவன் மற்றும் சவுந்தரம், கேரளாவுக்கு சென்றனர். அவர்களை தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் வடிவேல் தலைமையில் விவசாயிகள் மற்றும் முல்லை பெரியாறு அணை மீட்பு குழுவை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உரிமை புறக்கணிப்பு
இது குறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு பாதகமாகவே செயல்பட்டு வருகிறது. அணை ஆய்வு பணியின் போது கேரளாவை சேர்ந்த அதிகாரிகளை அதிக அளவில் அழைத்து செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இருந்து 2 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழகத்தின் உரிமை புறக்கணிக்கப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் வலியுறுத்தல்
பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை நியமிக்க கேரள அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. எனவே மூவர் குழு கூட்டமோ, துணைக்குழு கூட்டமோ அதில் தமிழக பிரதிநிதிகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
ஆலோசனைக்கூட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் இன்று தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் கூட்டாக ஆய்வு நடத்துகின்றனர். முல்லைப்பெரியாறு பிரதான அணை, மதகுகள் உள்ளிட்டவைகளை அவர்கள் பார்வையிடுகின்றனர். கேரளா பகுதியில் இருந்து வரக்கூடிய கசிவு நீரை அதிகாரிகள் அளவெடுத்து பரிசோதனைக்காக அனுப்ப உள்ளனர். இதனையடுத்து துணைக்குழுவின் தலைவர் உம்ப்பர்ஜி ஹரீஷ் தலைமையில் இரு மாநில அதிகாரிகளின் கூட்டு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.