தமிழகத்தில் மொத்தம் எத்தனை விவசாயிகள் தற்கொலை? எடப்பாடியார் அரசு பகீர் தகவல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கருகிய பயிர்களை பார்த்து விவசாயிகள் பலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தபோது வெறும் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் த.மா.கா. விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் விவசாயிகளின் உயிர் இழப்பு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டார்.
அவருக்கு தமிழக வேளாண்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட 82 விவசாயிகளுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை 2,049 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. குறுகிய கால கடன்களைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.