தேர்தலில் ஜெ.வுக்கு விவசாயிகள் பாடம் புகட்டுவார்கள்... விஜயகாந்த்
சென்னை: பொதுநலனில் அக்கறை இல்லாத ஜெயலலிதாவுக்கு வருகின்ற சட்டசபைத் தேர்தலில் விவசாயிகள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காத அ.தி.மு.க. அரசு தற்போது தேர்தலை மனதில் கொண்டு, விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்கின்ற நோக்கத்தில் மட்டுமே, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நெல் கொள்முதலுக்கு வழங்கக்கூடிய தொகையான ரூ.1,460 மற்றும் ரூ.1,520 என்பது கட்டுபடியாகவில்லை என்றும், அதனால் அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்த அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
பொதுநலனை பேண வேண்டிய பதவியில் இருந்து கொண்டு, அதில் அக்கறை செலுத்தாமல், கடமை தவறி, சுயநல அரசியலும், ஆட்சியும் நடத்தும் ஜெயலலிதாவிற்கு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடிகொடுப்பார்கள். எல்லோரையும், எல்லா நாளும், எப்போதும் ஏமாற்ற முடியும் எனக் கருதும் அவருக்கு, தமிழக விவசாயிகள் தக்க சமயத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.