5 லட்சம் கொடுத்தால்தான் "சேர" விடுவோம்... மருமகளை மிரட்டிய கேடு கெட்ட மாமனார், மாமியார்
சென்னை: உனது பெற்றோரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் வாங்கி வர வேண்டும். அப்படி வாங்கி வந்தால்தான் எனது மகனுடன் உன்னை சேர விடுவோம் என்று கூறி கேவலமாக நடந்து கொண்ட மாமனார், மாமியார் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சீர்காழியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன். இவரது மகள் ரேணுகா. இவர் ஆதனூர் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருடன் சென்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜயகுமாரிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர், "சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் முதல் தெருவை சேர்ந்த யுகசெல்வன் சாப்ட்வேர் என்ஜினியருக்கும் எனக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நெய்வேலியில் பதிவு திருமணம் நடைபெற்றது. அன்று முதல் கூட்டு குடும்பமாக வசித்து வந்தேன்.
திருமணம் ஆகி ஒரு மாதம் கழித்து எனது மாமனார் திருசங்கு, மாமியார் வன ரோஜா, நாத்தனார் நிர்மலா தேவி ஆகியோர் என்னிடம் வலுக்கட்டாயமாக எனது பெற்றோர் வீட்டிலிருந்து ரூபாய் 5 லட்சம் பணமும், நகைகளும் வாங்கி வந்தால் தான் உன்னை எனது மகனுடன் தாம்பத்ய உறவுக்கு அனுமதிப்போம் என்று கூறி ஒரே வீட்டில் என்னையும், எனது கணவரையும் பிரித்து வைத்தனர்.
மேலும் வீட்டில் நான் தனியாக இருக்கும் போதெல்லாம் எனது மாமனார் எனது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி நான் எனது கணவரிடம் பலமுறை கூறியும் அவரிடம் அனுசரித்து போ என்று சொல்லி எனது கணவர் என்னை கேலி செய்து வந்தார். அதன் பிறகு கூடுவாஞ்சேரியில் உள்ள கபாலி பிரைமரி நர்சரி பள்ளியில் என்னை ஆசிரியராக சேரச்சொல்லி கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தினர்.
நாங்கள் கேட்ட வரதட்சணையை நீ உனது பெற்றோரிடம் சென்று வாங்கி வரவில்லையென்றால் உன்னை சிலிண்டரை பற்ற வைத்து கொன்றுவிடுவோம் என்று மிரட்டி சமையலறைக்கு செல்லும்போதெல்லாம் எனது மாமியார் மற்றும் நாத்தனார் கரண்டியால் அடித்தும், கழுத்தை நெறித்தும் என்னை துன்புறுத்தினர்.
பின்னர் நாங்கள் கேட்கும் வரதட்சணையை கொடுக்க முடியாத உனக்கு எதுக்குடி வாழ்க்கை என்று கூறி எனது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் பக்கத்து வீட்டு பெண் சீமா ஆகியோர் என்னை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரத்திவிட்டனர்.
இதனையடுத்து கடந்த 25 ஆம் தேதி எனது கணவர் வீட்டு முன் காத்திருந்தேன். ஆனாலும் என்னை எனது கணவர் ஏற்றுகொள்ளவில்லை. இதையடுத்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வரதட்சணை கேட்டு அதை நான் எனது பெற்றோரிடம் வாங்கி கொடுக்க மறுத்ததால் பாலியல் தொந்தரவு கொடுத்து என்னை எனது கணவரிடம் வாழவிடாமல் வாழ்க்கையை கெடுத்த மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் மீதும் இவர்களது நடவடிக்கைகளை கண்டிக்காத எனது கணவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.