போதையில் சண்டை... ஸ்டெம்ப்பால் மகனை அடித்துக் கொன்ற தந்தை.. கண்டுக்காத தாய்!
சென்னை: அப்பாவும், மகனுமாக குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. இதையடுத்து பெற்ற பிள்ளை என்றும் பாராமல் கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் சரமாரியாக அடித்துக் கொன்றார் தந்தை. அவரது செயலுக்குத் துணை போனார் தாய். இப்போது இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே மறைமலைநகர் கரும்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான செல்வம். இவரது மனைவி பெயர் மோகனா. இத்தம்பதிக்கு ஒரு மகன், சுரேஷ் குமார் (27) என்ற மகன். வாட்ச்மேனாக இருந்து வருகிறார் செல்வம்.
செல்வத்தின் மகளுக்குத் திருமணமாகி விட்டது. பெருங்களத்தூரில் வசித்து வருகிறார். மகன் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். செல்வமும், அவரது மகனும் சேர்ந்து குடிப்பார்கள். அப்போது பலமுறை தகராறு வரும். அதில் செல்வம் பலமுறை அடி வாங்குவாராம். இதில் 2 முறை அவரது காலை உடைத்துள்ளார் மகன் சுரேஷ்குமார்.
இந்த நிலையில், பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வம், மோகனா நேற்று முன்தினம் சென்றுவிட்டு, நேற்று காலை 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து தந்தையும், தாயும் கதறி அழுதனர். இதுகுறித்து உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து பார்த்தனர். ஆனால் சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரியவில்லை என்பதை உணர்ந்தனர். செல்வம், மோகனாவிடம் விசாரித்தனர். இருவரும் விசாரணையில் மாறி மாறிப் பேசவே காவல் நிலையம் கொண்டு சென்று முறைப்படி விசாரித்தனர். அதில் உண்மை தெரிய வந்தது.
நேற்று முன்தினம் இரவு செல்வத்துக்கும், சுரேஷ்குமாருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ்குமாரிடம் வேலைக்கு சென்று சம்பளம் தருவதில்லை, ஆனால் தினமும் குடித்து விட்டு சுற்றுகிறாயே என செல்வம் கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் குமார், அதெல்லாம் பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதன் பின்னர் செல்வமும், மோகனாவும் மகள் வீட்டுக்குப் போய் விட்டனர். நள்ளிரவில் செல்வம் மட்டும் வீடு திரும்பினார். வீட்டில் சுரேஷ் குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து வெகுண்ட செல்வம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து சரமாரியாக மகனை அடித்துள்ளார். அதில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் மீண்டும் பெருங்களத்தூர் வந்த செல்வம், மனைவியிடம் நடந்ததைக் கூறினார். அவரது ஆலோசனைப்படி காலையில் வீடு திரும்பினர். நாடகம் போட்டுள்ளனர். இதையடுத்து கொலை செய்ததாக செல்வத்தையும், உடந்தையாக இருந்ததாக மோகனாவையும் போலீஸார் கைது செய்தனர்.