சுவாதி படுகொலை போல நடந்த பயங்கரம்... பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை, பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். 2-வது மகள் சோனியா (வயது23), பிளஸ்-2 படித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
அவர் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதற்காக தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது சோனியாவை பின் தொடர்ந்து வந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக் காதல் பிரச்சினையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அதே பாணியில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சோனியா கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.