பெரா வழக்கு: கேள்விகளை முன்கூட்டியே கேட்ட சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு
அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்துள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜெ.ஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் விதிகளை மீறி பல கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்தது. இதில் சசிகலா உறவினர் பாஸ்கரன், மற்றும் டிடிவி தினகரனும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குற்றத்தை மறுத்ததால் அமலாக்கதுறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் இருப்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தன் மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தும்படி மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி ஜாகிர் ஹுசைனும் வீடியோ கான்பரன்ஸ்க்கு அனுமதி அளித்தார்.
அத்துடன் சசிகலா தரப்பில் தமிழ் மொழியில் விசாரணை நடத்தவும், அமலாக்கதுறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி எதிர்ப்பு தெரிவித்தால் அதன் காரணத்தை எழுத்து பூர்வமாக அளிக்க கூறினார்.
இந்த வழக்கு 6ஆம் தேதிக்கு நீதிபதி ஜாகிர் ஹுசைன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் 12ம் தேதி அளிக்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தது. வழக்கில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.