தொடர் திருவிழா எதிரொலி: நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
தொடர்ச்சியாகத் திருவிழாக்கள் வந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் திணறிப் போயுள்ளனர்.
நெல்லை: தொடர்ச்சியாகத் திருவிழாக்கள் வந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்வு வாடிக்கையாளர்களைத் திணறடித்துள்ளது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று சுதந்திர தின விழாவும் நடக்கிறது. இதன் காரணமாக பூக்கள் விலை அனைத்துப் பகுதிகளிலும் உயர்ந்துள்ளது. நெல்லை, பாளை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ரூ.300க்கு விற்பனையான மல்லிகைப் பூ விலை மாலை திடீரென ரூ.500க்கு உயர்ந்தது. இதேபோல் பிச்சி பூ விலையும் ரூ.600க்கு எகிறியது.
கனகாம்பரம் விலை ரூ. 600லிருந்து ரூ.650 வரை விற்கப்பட்டது. மேலும் கேந்தி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, வாடா மல்லி ரூ.50, ரோஸ் ரூ.100, கொழுந்து ரூ.200, வில்வம் ரூ.200 உள்படப் பல வகை பூக்களின் விலை உயர்ந்ததால் பொது மக்கள் திணறினர்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், " நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாத நிலையிலும் பூக்கள் வரத்துக்குக் குறைவில்லை. இருப்பினும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலர் பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்ததால் அனைத்துப் பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
இன்று சுதந்திர தினம் என்பதால் ரோஸ் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது." என்று தெரிவித்தனர்.