ஃபெட்னா திருவிழா.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
சென்னை: அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஃபெட்னா திருவிழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் (FeTNA Annual Convention 2017) தன் ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது பேரவை.
அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் (Minnesota Tamil Sangam), பேரவையும் இணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியாபொலிசு நகரில் (Minneapolis Convention Center) நடத்தவிருக்கிறது.
இவ்விழாவிற்கு மின்னசோட்டா மாகாண ஆளுநர் மார்க் டேட்டன், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி, மலேசியா பினாங்கு மாகாண துணைமுதல்வர் இராமசாமி, அமெரிக்க செனட்சபை உறுப்பினர் 'மினசோட்டா' அல் ஃப்ரேங்க்கன், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி, அமெரிக்கப் பேராய உறுப்பினர் 'சிகாகோ' இராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைவர்களைத் தொடர்ந்து பல உலகத்தலைவர்கள் வாழ்த்துச் செய்தியினை அனுப்பியவண்ணம் இருக்கின்றனர்.
திருவிழாவுக்கு கயானா நாட்டுப் பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, காங்கிரஸ்மேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, களப்பணியாளர்கள் ரோகிணி, வெ.பொன்ராஜ், கார்த்திகேய சிவசேனாபதி முதலானோர், எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, வரலாற்றுத் தொல்பொருள் ஆய்வாளர் ஒரிசா பாலு, திரைப்படப் படைப்பாளிகள் மிஷ்கின், இரா.பார்த்திபன், சின்னி ஜெயந்த், சுவர்ணவேல் ஈசுவரன், தமிழ்ப்பண்ணிசை மேதைகள் கோ.ப.நல்லசிவம், பாடகர் ஜெய்மூர்த்தி, முனைவர் குமணராஜா, நிகழ்த்துகலை விற்பன்னர்கள் பேராசிரியர் ஆர்.இராஜூ, கலா.பினுகுமார், எஸ்.சந்தோஷ், இசை ஆய்வாளரும் கலைஞருமான பி.முருகவேல், நடிகரும் பாடகருமான ஆண்ட்ரியா உள்ளிட்டோருடன் இன்னும் ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுத் திருவிழாவினைச் சிறப்பிக்க உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும், நமது மொழி, பண்பாடு, மரபுகளை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு, அமெரிக்கத் தமிழர்கள் ஒன்றுகூடி கடந்த 29 ஆண்டுகளாக தமிழ் விழாவினை தொடர்ந்து நடத்தி வரும் பேரவையின் தமிழ்ப்பணியைத் தாம் உளமாரப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
மின்னசோட்டா மாகாணத்துக்குத் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் உள்ளூர்த்தமிழர்கள், தமிழ்க்கலைகளைப் போற்றுவோம்; தமிழர் மரபை மீட்டெடுப்போமெனும் விழா உள்ளீட்டுக்குச் சிறப்புச் சேர்த்து, வருங்காலத் தலைமுறையினருக்கு உதவிடுவார்களென்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாயும் விழா மாபெரும் சிறப்பெய்துமெனவும் தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் மின்னசோட்டா ஆளுநர்.
பேரவையின் வெள்ளிவிழாவில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்தும், உலகத்தமிழர்களின் விழுமியத்துக்குப் பெருமை சேர்க்கும் ஃபெட்னாவையும் திருவிழாவையும் தாம் அகமகிழ்ந்து பாராட்டுவதாயும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் மலேசியா பினாங்கு துணைமுதல்வர். புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கும் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் மின்னசோட்டா மாநிலத்துக்கும் சிறப்புச் சேர்ப்பதையெண்ணித் தாம் பெருமைப்படுவதாகவும், பல்லின மக்களின் பண்பாட்டு மேன்மைக்குப் பெருமை சேர்க்கும் விழா வெற்றி பெற வேண்டுமெனத் தாம் நினைத்துப் பாராட்டுவதாகவும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் மின்னசோட்டா மாகாணத்துக்கான செனட்டர்.
புலம்பெயர்ந்து வாழும் சூழலில் தமிழர்களின் அரசியற்பங்களிப்பு பெருமைமிக்கதாகவும், அந்தந்த நாட்டுக்குச் சிறப்புச் சேர்ப்பதாகவும் இருப்பதையெண்ணித் தாம் மகிழ்வதாகவும், அத்தகையோரை அழைத்துச் சிறப்பிக்கும் பேரவையின் திருவிழாவுக்குத் தம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, பேரவையுடன் தொடர்ந்து செயற்படத் தாம் ஆவலுடன் இருப்பதாகத் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி.
இத்தகு தலைவர்களின் ஆதரவோடும் பங்கேற்புமோடும் தத்தம் துறையில் வெற்றிபெற்ற பல தமிழ்முனைவோர், வர்த்தகர்கள், வணிக நிறுவனங்களைச் சார்ந்த ஆளுமைகளும் விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடைபெறும் விழாவில் இடம் பெறவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றின கூடுதற்தகவலுக்கு பேரவைத் தளத்தினை நாடுமாறு திருவிழாவின் மக்கள் தொடர்புக் குழுவினர் பொதுமக்களை வேண்டிக் கேட்டுள்ளனர். விழாக்கோலம் பூண்டிருக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சூழலைத் தொடர்ந்து, உலகெங்கும் பரவி வாழும் தமிழின மக்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.