சசி குடும்பத்தை வெளியேற்றனும்.... நிதித்துறை வேண்டும் - ஓபிஎஸ் கோஷ்டியின் முக்கிய டிமாண்ட்
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும், அமைச்சரவையில் நிதித்துறை வேண்டும் என்று சசிகலா கோஷ்டியிடம், ஒபிஎஸ் கோஷ்டி டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும், ஆட்சியில் நிதித்துறை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முக்கிய டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனித்தனியா இருந்த கட்சியும் சின்னமும் காணாமல் போய்விடும், இணைந்து இருந்தால்தான் மதிப்பு, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்த முடியும் என்று யோசித்தே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைய முடிவு செய்துள்ளன.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மட்டுமே இரட்டை இலையை கைப்பற்ற முடியும் என்பது மூத்த அமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும், இதனையடுத்தே ஓபிஎஸ் கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஓபிஎஸ் டிமாண்ட்
அப்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையே சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தரும் கட்சியிலேயே இருக்கக் கூடாது என்பதுதானாம்.
டிடிவி தினகரனின் கட்டளையை கேட்ட அமைச்சர்களே தயாராக இல்லை என்பதால் இதற்கு எளிதாக தலையாட்டி விட்டனராம்.
நிதித்துறை வேண்டும்
முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கலாம் என்பதில் ஒபிஎஸ் கோஷ்டிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில் இரண்டாவது இடமான நிதித்துறை ஓபிஎஸ் வசமாக வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இரண்டாவது இடமான நிதித்துறை ஓபிஎஸ் வசமாகவே இருந்தது. எனவே அதேபோல இப்போது நிதியமைச்சகத்துறை தரவேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் அவர் வசம்தான் நிதித்துறை இருந்தது. அதனை பறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வசம் கொடுத்தது டிடிவி தினகரன்தான். அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் பலருக்கும் திருப்தியில்லை. பட்ஜெட் உரையின் போது அவர் பலரையும் முகம் சுழிக்க வைத்து விட்டார் என்றே கூறலாம்.
ராஜினாமா வலியுறுத்தல்
இந்த சூழ்நிலையில்தான் தற்போது இரு அணிகளும் இணைவது பற்றி பேசி வருகின்றனர். அதன் முதல் கட்டமாகவே டிடிவி தினகரனை ராஜினாமா செய்யச் சொல்லி மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட கொங்கு மண்டல அமைச்சர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அப்போது உடன் இருந்த செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வீரமணியும் கூட டிடிவி தினகரனுக்கு எதிரான கருத்தையே முன்வைத்ததாக கூறப்படுகிறது.
பலி கொடுக்க தயார்
டிடிவி தினகரன் என்ற ஒற்றை நபருக்காக கட்சி, ஆட்சி, சின்னத்தை பலி கொடுக்க யாரும் தயாராக இல்லை மாறாக டிடிவி தினகரனை பலிகொடுத்து நான்கு ஆண்டுகால ஆட்சியை காப்பாற்றுவதோடு தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட கட்சியையும், சின்னத்தையும் மீண்டும் மீட்கலாம் என்று முடிவு எடுத்தே அடுத்த நகர்வுகளை தொடங்கினர் அமைச்சர்கள் மணி அன் கம்பெனியினர்.
|
வேலுமணி, தங்கமணி
டிடிவி தினகரன் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து அமைச்சர்களை அழைத்து கூட்டம் போட்டனர். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனையும் தங்கள் வசமாக்கினர். டிடிவி தினகரனுக்கு அமைச்சரவை மொத்தமும் களமிறங்கியுள்ளன.