புகார் கொடுத்தவர் சமாதானமாக செல்ல முடிவு... அழகிரி மனைவி மீதான நில முறைகேடு வழக்கு ரத்து
மதுரை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீதான நில முறைகேடு வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் மனைவி காந்தி. இவர் மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் ராமமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தை முறைகேடாக வாங்கியதாக, ராமமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காந்தி அழகிரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் விசாரித்தார். அப்போது புகார் அளித்த ராஜேஸ்வரி சமாதானமாகச் செல்வதாக கூறினார். அதனைத் தொடர்ந்து காந்தி அழகிரி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக காந்தி, புகார் கொடுத்த ராஜேஷ்வரி, அவரது மருமகள் துரைப்பாத்தியம்மாள் மருமகன் கே.ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். அதில் தங்களுக்குள் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறியிருந்தனர். இதை ஏற்று நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.