நெல்லை பிரானூர் பார்டர் பரோட்டா கடையில் பயங்கர தீ
நெல்லையில் உள்ள பரோட்டா கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
நெல்லை: நெல்லையில் உள்ள பரோட்டா கடையில் நேற்று காலை தீவிபத்து நடந்தது. எனினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழக- கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பிரானூர் பார்டரில் புகழ் பெற்ற பரோட்டா கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குற்றால சீசன் தொடங்கிவிட்டால் மாலை 6 மணிக்கு மேல் பரோட்டா சாப்பிட கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இதன் காரணமாக பிரானூர் எல்லையில் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகி வருவது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் இந்த கடையில் உணவுகள் சமைக்கும் கூடாரத்தையொட்டி உள்ள இடத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் ஊழியர்கள் மதிய உணவு தயார் செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது திடீர் என கடையில் தீ பற்றியது.இதனை கண்ட கடை ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.உடனடியாக மின் இணைப்பை துண்டித்து அங்கே குடிநீர் ஏற்றிவந்த டிராக்டரில் இருந்த குடிநீர் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கூறவே அவர்கள் வாகனம் விரைவாக வந்து தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட து.
அந்த உணவகத்தில் மாலை 6 மணிக்கு மேல் தீப்பற்றியிருந்தால் பெரியளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய அளவு பாதுகாப்பு வசதிகளும் இல்லை. தீயின் காரணமாக அடுப்பு எரிக்க பயன்படுத்த குவித்து வைத்து இருந்த விறகு,கடையின் மேற் கூரைகள், கடையின் உள் பகுதி உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமாகியது.
தீவேகமாக பரவி கடை முழுவதும் நாசமடைந்ததற்கு சிலிண்டர் வெடித்ததுதான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.