சிவகாசி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து- 9 பேர் பரிதாப பலி- உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசுக் கிட்டங்கி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு வெடித்து சிதறுவதால் தீயணைப்பு துறையினர் அருகில் சென்று தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். படுகாயமடைந்த பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தீபாவளி நேரம் இது. இதற்காக வகை வகையான பட்டாசுகளை தயாரித்து வருகிறது சிவகாசி. சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு பட்டாசு கிட்டங்கியில் வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகள் பெட்டி பெட்டியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த கிட்டங்கியில் இருந்து பட்டாசுகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த போது தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மளமளவென தீ பரவியதால், கிட்டங்கி முழுவதும் தீ பற்றிக் கொண்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதற தொடங்கின. கிட்டங்கி உள்ள அந்த கட்டடமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பற்றி எரிகிறது. இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதுதவிர, இந்த கிட்டங்கியின் அருகில் மருத்துவ பரிசோதனை ஸ்கேன் நிலையம் ஒன்று இருப்பதால், அங்குள்ள ஊழியர்களும், ஸ்கேன் எடுக்க வந்த நோயாளிகளும் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனை மையத்தின் பின் பக்க கண்ணாடி ஜன்னலை உடைத்து தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அந்த இடமே கரும்புகை மண்டலத்தால் சூழ்ந்துள்ளது. தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ படுவேகமாக பரவி எரிவதாலும், பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதாலும் தீயணைப்பு வீரர்களால் கிட்டங்கியை நெருங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த பட்டாசு கிட்டங்கி ஆனந்த் என்பருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி சீசன் தொடங்கி 2 மாதங்களில் இதுவரை 10க்கும் மேற்பட்ட பட்டாசு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 பேர் மரணமடைந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.