சென்னை குறளகத்தில் திடீர் தீ... உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரசு கட்டடமான குறளகத்தில் இன்று அதிகாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் 5 மாடிகள் கொண்ட குறளகம் அரசு கட்டடம் உள்ளது. இதில் கோ-ஆப் டெக்ஸ், ஆவின், காதி கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலையில், 4வது மாடியில் உள்ள எல்காட் நிறுவன சர்வே அலுவலக அறையின் வெளிப்புறம் இருந்த ஏ.சி. எந்திரத்தின் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகையும் வெளியேறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற தீயணைப்புப் படையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் அறைக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டு விட்டது. பெரும் சேதமும் தவிர்க்கபப்ட்டது.
அதிகாலையில் நடந்த விபத்து என்பதாலும், இன்று அரசு விடுமுறை என்பதாலும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.