ஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீவிபத்து.. எதையும் எரித்து விட்டார்களா?
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
சென்னை: திருப்போரூர் அடுத்த, சிறுதாவூரில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. இங்கு அவர் அடிக்கடி ஓய்வெடுக்கச் செல்வார். அவரது மரணத்திற்குப் பிறகு தற்போது அந்த பங்களா கேட்பாரற்று உள்ளது. இன்றைய தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க மாமல்லபுரம், கல்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பங்களாவின் உள்ளேயும், பங்களாவிற்கு வெளியே உள்ள புல்வெளியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து போய் விட்டதாக தெரிவிக்கின்றன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் அவர் வசித்து வந்த போயஸ்கார்டன் பங்களாவை யாரும் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மரங்கள், புல்வெளிகள் காய்ந்து போய் விட்டன.
இதேபோல ஜெயலலிதா அவ்வப்போது வந்து தங்கிய சிறுதாவூர் பங்களாவையும் சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். பங்களாவை சுற்றியிருந்த மரங்கள், புல்வெளிகள் காய்ந்து விட்டன. தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால் புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டு பங்களாவிற்குள் பரவியிருக்கலாமா? அல்லது சதி வேலை எதுவும் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.