ஆய்வுகள் இல்லாமல் உரிமம் வழங்கப்படுவது தான் பட்டாசு ஆலை விபத்துகளுக்குக் காரணம்: விஜயகாந்த்
விருதுநகர்: எந்தவித ஆய்வும் செய்யாமல் உரிமம் வழங்குவதால் தான் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுகின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தூர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று தீடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம், ஆய்வுகள் செய்யப்படாமல் உரிமம் வழங்கப் படுவது தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பல ஊர்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதி வாழ் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே பட்டாசு ஆலைகளில் வேலை செய்வதுதான். சாத்தூர் அருகிலுள்ள சிவலிங்கபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வேலை பார்த்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் யாருக்கும் தெய்வாதீனமாக எந்தவித பாதிப்பும் இந்த விபத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளின்படி பட்டாசு ஆலை நடைபெறுகிறதா? என எந்தவித ஆய்வும் செய்யாமல் உரிமம் வழங்குவதால் தான், பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்கதையாக நடக்கிறது. எந்த துறையை எடுத்தாலும் லஞ்சமும், ஊழலும் கொடிகட்டி பறக்கிறது.
விபத்து நடக்கும்பொழுது மட்டும் பட்டாசு தொழிற்சாலைகளை பரபரப்பாக ஆய்வு செய்வதும், கடுமையான விதிமுறைகளை கடைபிடிப்பதைப் போன்ற போலி தோற்றத்தை மக்களிடத்தில் காட்டி ஏமாற்றுவதுமே இந்த அரசின் வாடிக்கை என மக்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.