சென்னை பேக்கரி தீவிபத்து.. தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிவாரணம்
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயை அணைக்க முயன்ற போது இறந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜன் குடும்பத்திற்கு ரூ. 13 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்க முயன்ற போது தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானார். 47 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, "கடை ஷட்டரை திறந்த போது சிலிண்டர்கள் வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று முதல்வர் கூறினார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த ஏகராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் முதல்வர் அறிவித்தார். காயம் அடைந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஏகராஜ் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.