முதல் மெட்ரோ ரெயிலை சென்னையை சேர்ந்த பெண் ஓட்டி சாதனை..
சென்னை : இன்று தொடங்கிய மெட்ரோ ரயிலை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.
ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2-வது வழித்தடமான சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரெயில் நிலையங்கள் என 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்ததையடுத்து அந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது . தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தார்
இதையடுத்து சரியாக பகல் 12.16 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்ட முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி. மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கு என்றே சிறப்பு பயிற்சி எடுத்து உள்ளார்.
முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து இன்று பகல் 12.16 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது. அந்த ரெயில் 12.37 மணிக்கு கோயம்பேடு சென்றடைந்தது. முதல் ரெயில் 21 நிமிடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு சென்றடைந்தது.