கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதிநவீன பி8ஐ போயிங் போர் விமானங்கள் அர்ப்பணிப்பு
அரக்கோணம்: நாட்டின் கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதிநவீன மிக வேகமாக செல்லக் கூடிய போயிங் பி-8ஐ ரக விமானங்கள் இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படைக்காக அதிநவீன போர் விமானமான பி8ஐ எனும் உலகத்தரம் வாய்ந்த 8 விமானங்கள் வாங்க கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்கா நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறை 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து 2013-ஆம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது.
இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து நேரிடையாக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்துக்கு வந்தது. 8வது விமானம் கடந்த அக்டோபர் 12-ந் தேதி இந்தியா வந்தடைந்தது.
முதல் விமான பெறப்பட்ட நிலையில் இருந்து இந்த விமானங்களில் இந்திய கடற்படையினர் 30 மாத பயிற்சியை இக்குழுவின் தலைவர் கேப்டன் வெங்கடேஸ்வரன் ரங்கநாதன் தலைமையில் மேற்கொண்டனர்.
இந்த விமானங்கள் பயிற்சியின் போதே, மலேசியன் ஏர்லைன்ஸ் மாயமாக மறைந்த சம்பவத்தில் அதைத் தேடும் பணியிலும் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழா அணிவகுப்பிலும் பங்கேற்றது.
தற்போது அனைத்துப் பயிற்சிகளும் முடிந்த நிலையில் பி8ஐ விமானங்கள் முழுவதுமாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா அரக்கோணம் கடற்படை தளத்தில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அத்துடன் போர்ட் பிளேயர் தளத்தில் இருந்து அரக்கோணத்துக்கு பி8ஐ விமானத்தில் பயணித்துப் பார்த்தார். அப்போது, உலகிலேயே மிக சிறந்த கண்காணிப்பு விமானமாக இது திகழும் என்றார்.
இந்த அதிநவீன பி8 ஐ போர் விமானமானது கடற்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். இந்த விமானங்கள் 10 மணிநேரம் தொடர்ந்து பறக்கக் கூடியவை என்பது சிறப்பம்சமாகும்.