இன்றோடு முடியும் மீன்பிடித் தடைக் காலம்.. கடலுக்கு செல்ல தயாராகும் தூத்துக்குடி மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடியும் நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
தூத்துக்குடி: மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
வங்காள வளைகுடா பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் தடை விதிக்கப்படும். இந்த 45 நாட்களை அரசு 61 நாட்களாக அதிகரித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமலுக்கு வந்த தடை காலம் இன்றுடன் முடிகிறது. இந்தத் தடை காலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பழுது பார்த்தனர்.
இந்தத் தடை காலத்தில் அரசு மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது. இந்த நிவாரணத் தொகை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே பராமரிப்பு பணிகள் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இன்றுடன் தடை காலம் முடிவதால் நாளை காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். இதற்கு வசதியாக மீனவர்கள் கடலில் விசைப்படகுகளை இறக்கி சோதனை ஓட்டத்தை நடத்தினர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்ல இருப்பதால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.