என்னை சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி என விமர்சித்தவர் ராமதாஸ்- ரஜினி கொந்தளிப்பு
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் என்னை சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி என்று மிகக் கேவலமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் விமர்சித்தார். என் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டு கொந்தளித்தார்கள். எங்கள் எதிர்ப்பை காட்டியே தீருவோம் என்று ஒரு குரலாக அவர்களுடைய உணர்ச்சிகளை கொட்டினார்கள்.
அவர்களுடைய உணர்வுகளில் நியாயம் இருப்பதினால் அதை மதித்து பா.ம.க. போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கச் சொன்னேன். அவர்கள் செயல்படத் தொடங்கியவுடன் அந்த ஆறு தொகுதிகளில் இருக்கும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் என் ரசிகர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அடியாட்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்தன. காவல்துறையினர் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் என் ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது.
ஆகையால் அந்த ஆறு தொகுதிகளில் பா.ம.க., வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு வெளிப்படையான ஆதரவு என் மன்றங்கள் அளித்தால் அவர்கள் என் ரசிகர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அதனால் வெளிப்படையான என் மன்ற ஆதரவை அ.தி.மு.க., பா.ஜ.க.,விற்கும் அளிக்கும்படி என் மன்றங்களுக்கு ஒப்புதல் அளித்தேன். எனக்கு டாக்டர் ராமதாசை எதிர்ப்பதை விட என் ரசிகர்களின் நலனும், உயிரும், பாதுகாப்பும் தான் முக்கியம்.
இத்தருணத்தில் மதுரையில் என் ரசிகர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடத்திய ராட்சஸ தாக்குதல்களை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலமும், செய்தித் தாள்களின் மூலமும் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவத்திற்காக டாக்டர் ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த தமிழக காவல் துறையினருக்கும், தமிழக அரசிற்கும் என் மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கிலிருந்து நாம் அவர்களை விடப்போவதுமில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை.