ப்ளாஷ் பேக்: ராமதாஸை விமர்சித்து ரஜினி கொடுத்த கடைசி "வாய்ஸ்"!
2004 லோக்சபா தேர்தலின் போது ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதான் தேர்தல் தொடர்பாக வெளிப்படையாக ரஜினிகாந்த் கொடுத்த கடைசி வாய்ஸ்.
சென்னை: தமிழக அரசியலில் ரஜினிகாந்த் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கொடுத்ததுதான் கடைசி 'வாய்ஸ்'.. அதன்பிறகு இப்போதுதான் அரசியல் பற்றியே பேச தொடங்கியுள்ளார்.
1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தமிழகமே கொந்தளிப்பான மனநிலையில் இருந்தது. இந்த ஜோதியில் ரஜினியும் வெளிப்படையாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனால் தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் என்கிற புதிய அத்தியாயம் பிறந்தது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பஞ்ச் வசனம் பேசினார் ரஜினி. மக்கள் மனநிலையும் அப்படியே இருந்ததால் திமுக- தமாகா- ரஜினி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதன்பிறகு 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக- தமாகா கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் மக்கள் ரஜினியை நிராகரித்துவிட்டனர். திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது.
இதனால் 1999 லோக்சபா தேர்தல், 2001 சட்டசபை தேர்தலில் மவுனியாகிவிட்டார் ரஜினிகாந்த். 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமரும் என ஆரூடம் கணித்தார் ரஜினி. ஆனால் அதுவும் அம்போவானது.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் ரஜினி கொடுத்த கடைசி வெளிப்படையான வாய்ஸ். அப்போது திமுக கூட்டணியில் பாமக இருந்தது. அந்த தேர்தலின் போது பாபா திரைப்படம் வெளியாகி பாமகவினருடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது ரஜினி கோஷ்டி. அத்தேர்தலின் போது அதாவது ரஜினி பகிரங்கமாக கடைசியாக வாய்ஸ் கொடுத்து வெளியிட்ட அறிக்கை இதுதான்:
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும், வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாக பேசியிருக்கிறேனா?
பாபா படத்தில் நான் சிகரெட் பிடிக்கறதும், மது அருந்துவதும் இளைஞர்களை கெடுத்து விடும் என்ற குற்றச்சாட்டை கூறி, அந்த பட வெளியீட்டன்று படச்சுருளை கடத்தி, தியேட்டர் திரையை கிழித்து, திரையரங்க மேனேஜரை கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளை கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள். வன்னிய சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன்.
டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர், என்னை விட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை, வெறும் தொலைபேசியிலாவது, தம்பி இந்த மாதிரியான சீன்களையெல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களை கெடுக்கும் என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அந்த காட்சிகளை நீக்குவதைப் பற்றி சிந்தித்து இருப்பேன். முடிந்தால் அந்த காட்சிகளை நீக்கி இருப்பேன். முடியவில்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்த படத்தில் தவிர்த்து இருப்பேன். அல்லது இதுபோன்ற காட்சிகளை திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களை கெடுத்துவிடும் என்று சினிமா தணிக்கை குழுவிடம் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம்.
ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதை செய்யாமல் கோடான கோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா?
அதுமட்டுமின்றி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று சொல்லி என்னுடைய ரசிகர் மன்ற பலகைகளை உடைத்துத் தள்ளி, ரசிகர்களின் நெற்றியில் 'முட்டாள்' என்று எழுதிக் கொள்ளும்படி சொன்னார்கள். என் ரசிகர்கள் ஆவேசமடைந்தார்கள், நானும் பொறுமை காக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டேன், நானும் அமைதியாகத்தான் இருந்தேன்.