கனமழை எதிரொலி: 30 விமானங்கள் தாமதம்... சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதி !
சென்னை: சென்னையில் விடாது பெய்து வரும் கனமழையால் 30 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
விடாது விரட்டி விரட்டி கொட்டித் தீர்த்து வரும் மழையால் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பெரிதும் தடைபட்டது. இதையடுத்து விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நிற்காமல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 18 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி, டெல்லி, மதுரை உள்பட பல பகுதிகளில் இருந்து வந்த 15 விமானங்கள் உடனடியாக தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. பின்னர் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரத்திற்கு பின் அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின.
இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மதுரை, திருச்சி, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் 1 மணியில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், பயணம் செல்ல முடியாமலும் தவித்தனர். விமானங்களின் தாமதம் பற்றி அறிவிப்பு பலகைகளில் தகவல் வெளியிடப்படாததால் பயணிகளை வரவேற்க வந்த உறவினர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.