துபாய்-கோலாலம்பூர் விமான பயணிக்கு நெஞ்சு வலி.. சென்னையில் அவசர தரையிறக்கம்
சென்னை: துபாயில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னையில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின், EK346 என்ற விமானம், 115 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த நிலையில், 61 வயது பயணி ஒருவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இத்தகவல் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க கேட்டு விமான கட்டுப்பாட்டு ஆணையத்தை தொடர்புகொண்டார் பைலட்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறக்குமாறு பதில் வந்ததும், அவசரமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, அந்த பயணி மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிய தாமதத்திற்கு பிறகு விமானம் கோலாலம்பூர் கிளம்பி சென்றது.