தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு.... 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த அணையின் கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் காமன் தொட்டி, ஆலூர், புக்கசாகரம், தொரப்பள்ளி, பார்த்த கோட்டா, ராமாபுரம், உலகம், ஆழியாளம், போடூர் ஆகிய பகுதிகளில் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 8 கிராம மக்கள் சுமார் 15 கி.மீ. சுற்றியே ஓசூர், சூளகிரி ஆகிய நகரங்களுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காமன்தொட்டி, தொரப்பள்ளி, பார்த்த கோட்டா உள்பட 22 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கிருஷ்ணகிரி அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 52 அடியாகும். கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதால் இந்த அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணை கடல் போல காட்சி அளிக்கிறது.
அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து உபரிநீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.