பிச்சாட்டூர் அணை திறப்பு....ஆரணி ஆற்றில் வெள்ளம்.. 60 கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை!!
ஊத்துக்கோட்டை: ஆந்திராவின் சித்தூர் பிச்சாட்டூர் ஆரணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிச்சாட்டூர் ஆரணியாற்றில் திறந்துவிடப்படும் நீர் திருவள்ளூர் ஊத்தூக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. தற்போது அணையில் இருந்து 17 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படுகிறது.
இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஏற்கெனவே ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் மூழ்கியதால் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது தொடர்ந்து ஆரணி ஆற்றில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரை ஓரங்களில் உள்ள 60 கிராமங்களுக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.