மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்தது !
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்கான மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவில் தமிழகம் வந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையின் தாக்கத்தில் இருந்து இன்னும் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலன பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து, பிரதமருக்கு முதல்வர் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதில் தமிழகத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.2000 கோடி தேவை என குறிப்பிட்டு இருந்தார். வெள்ள சேதங்களை பார்வையிட, மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே தமிழக வெள்ள நிவாரணத்துக்கு முதல்கட்டமாக ரூ. 940 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனையடுத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட 9 பேர் கொண்ட மத்திய அரசின் உயர்மட்ட குழு நேற்று நள்ளிரவில் சென்னை வந்தது.. உள்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த டிவிஎஸ்.என்.பிரசாத் தலைமையிலான இக்குழுவில், உள்துறை, நிதித்துறை மற்றும் விவசாய துறையைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் மூத்த அதிகாரிகளுடன், மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் மத்திய குழுவினர், டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கை அளிப்பர். அதனடிப்படையில் வெள்ள சேத நிவாரண தொகையினை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது