வேளச்சேரி- தரமணி சாலையில் குளம் போல தேங்கிய கழிவு நீர் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் வேளச்சேரி- தரமணி சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. பல பகுதிகளில் வெள்ளம் வடிந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர், சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.
மழை நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளது. இந்த தண்ணீரை அகற்றுவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் நிலைமையை சீர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தாலும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றுக் கொண்டு இருக்கின்றன. ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுத்தி தண்ணீரை போக்குவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தாலும் அந்த உடைபுக்குள் தண்ணீர் போகாமல் சாலையிலேயே தேங்கியுள்ளதால் சாலை முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
மேயர் சைதை துரைசாமி 2 நாட்களுக்கு முன் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குள் சென்னை மாநகரில் தேங்கி நிற்கும் அனைத்து தண்ணீரையும் அகற்றி விடுவோம் என உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.