குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தொடர் சாரல் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம்: கடந்த 2 நாட்களாக குற்றாலம் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக குற்றாலம் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை கொட்டுகிறது. இதன் காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பெய்த தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
பிற்பகலில் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழத் தொடங்கியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகளின் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பேரருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.