குற்றாலம் சாரல் திருவிழா... பார்வையாளர்களை கவர்ந்த காய்கறி, மலர் கண்காட்சி
குற்றாலம்: சாரல் திருவிழாவை ஒட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெறும் காய்கறிகள், பழக்கண்காட்சியில் பச்சை மிளகாய் சேவல், கத்தரிக்காய் மயில்... ரோஜாப்பூ டைனோசர் என அலங்கரிக்கப்பட்டுள்ளது குற்றாலத்திற்கு வரும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னகத்தின் ஸ்பா என்று வர்ணிக்கப்படும் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து அலைமோதி வருகிறது.
சாரல் திருவிழா
நாடெங்கிலுமிருந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்கும் வண்ணம் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வார காலம் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 25ந் தேதி தொடங்கியது.
சுற்றுச்சூழல் பூங்கா
ஐந்தருவி பழத்தோட்டத்திலுள்ள சுற்றுசூழல் பூங்காவில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது ஆண்டாக, தோட்டக்கலை துறை சார்பில் மலர், காய்கறி, பழக் கண்காட்சி மற்றும் வாசனை திரவியங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
பழங்கள் காய்கறிகள்
பல்வேறு விதமான பழங்கள்,காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியின் நுழைவு வாசலில் பலா, பம்புளிமாஸ், பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களால் ஆன வரவேற்பு வளைவு சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.
வண்ண வண்ண மலர்கள்
கண்காட்சி அரங்கில், பெங்களூரு, கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வகை ரோஜாக்கள், அசிட் ரொமேனிடா, ஹைட்ராஞ்சியா, சொப்ரா, ஆஸ்டர் போன்ற விதவிதமான மலர்களால் பல வடிவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ரோஜா டைனோசர்
பெங்களூரு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தாஜ்மகால் ரோஜா, கார்னேசன் மலர்களால் டைனோசர் உருவம் செய்யப்பட்டு இருந்தது. இது குழந்தைகள் உள்பட அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
யானை, மயில்
ஆஸ்பரா மற்றும் பூக்களால் உருவான யானை, காய்கறி, பழங்களால் உருவான மயில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஏராளமானோர் இவற்றின் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
பச்சை மிளகாய் சேவல்
பச்சை மிளகாய், காரட் கொண்டு வடிவமைக்கப்பட்ட சேவல், அன்னாசி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முதலை என பார்வையாளர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
குவிந்த பயணிகள்
ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஐந்தருவிக்கு சென்று குளியல் போட்டு விட்டு நேராக பழக்கண்காட்சி நடைபெற்ற பகுதிக்கும் சென்று விசிட் அடித்து அனைத்தையும் பார்த்து ரசித்தனர்.