முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி சோதனை - பணம் பதுக்கலா?
கடையந்ல்லூர்: வாக்காளர்களூக்கு பணம் கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நைனார் முகம்மது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக போட்டியிடும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் கரூரில் அதிமுக அமைச்சரின் நண்பர் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. தற்போது அவர் தலைமறைவாகி விட்டார்.
இது போல் வேறு இடங்களிலும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது போல் பணம் பதுக்கல் தொடர்பாக தென்காசி அதிமுக மகளிரணி வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. ஆனால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக எந்த வித பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையே கடையநல்லூர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதற்காக முன்னாள் எம்எல்ஏ நைனார் முகம்மதுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பள்ளியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் பள்ளியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பணம் எதுவும் சிக்கியதா என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.
கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவூது போட்டியிடுகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இது தொடர்பாக அவர் அதிமுக தலைமைக்கு தகவல் தெரிவிக்கவே தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், நைனா முகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நைனா முகமது வீடடில் சோதனை நடந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.