வரலாறு காணாத பண வேட்டை.. தமிழகத்தில் இதுவரை ரூ. 81.85 கோடி சிக்கியது!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி நடந்து வரும் வாகனச் சோதனையில் இதுவரை தமிழகத்தில் ரூ. 81.85 கோடி அளவுக்குப் பணம் சிக்கியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இவை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணமாகும்.
இதுதொடர்பாக லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறையையொட்டி, தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக்குழுவும் மாவட்டங்களில் சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதன்படி கடந்த 2-ந்தேதி பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.82.25 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.54 லட்சம், மதுரை மாவட்டத்தில் ரூ.32.60 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.93 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1.11 லட்சம் உட்பட மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 44 கைப்பற்றப்பட்டது.
நிலையான கண்காணிப்புக்குழு சோதனையில் கடந்த 2-ந்தேதி வேலூர் மாவட்டத்தில் ரூ.5.52 லட்சம் மதிப்பிலான காட்டன் லுங்கிகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3.60 லட்சம் ரொக்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.14 லட்சம், மதுரை மாவட்டத்தில் ரூ.2.26 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.40 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.2.86 லட்சம் ரொக்கம், தேனி மாவட்டத்தில் ரூ.14.50 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் ரூ.2.90 லட்சம் உட்பட மொத்தம் ரூ.30 லட்சத்து 48 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவரை பறக்கும் படையினரால் ரூ.29 கோடியும், நிலையான கண்காணிப்புக்குழுவினரால் ரூ.31 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமானவரித் துறையினர் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.21.85 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்த தொகையையும் சேர்த்து இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.