கோயம்பேட்டில் அதிரடி ரெய்டு- உணவுப் பொருட்கள், குடிநீர் பாக்கெட்டுகள் தரம் குறித்து ஆய்வு!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் பெட்டிக் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் குளிர்பான பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகளின் தரமானது உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினால் ஆய்வு செய்யப்பட்டது.
இவற்றின் தரம் குறித்த புகார்கள் வந்த காரணத்தினால் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஏ.சதாசிவம், ராஜா, சந்திரசேகர், சிவசங்கரன், ஜெயகோபால் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.
வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகில் உள்ள ஒரு மொத்த வணிக கூடம் ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட 180 கிலோ அளவிலான புகையிலை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தடையை மீறி விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த புகையிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பான பாக்கெட்டுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட புகையிலை மற்றும் காலவதியான குடிநீர் பாக்கெட்டுகள் சென்னை குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட உள்ளன.