ரயில் சிக்னல் ஏணி எமனாக மாறியதால் உடல் துண்டாகி உயிரிழந்த பிரவீண், மணி
ரயில் சிக்னலை சரிபார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏணி எமனாக மாறியதால் மின்சார ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மூவர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர்.
சென்னை: ரயில் சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த ஏணிதான் இன்று சென்னையில் 3 பேர் பலியாக காரணமாக இருந்ததற்கு எமனாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பணிக்காக அவசரம் அவசரமாக ஓடிவந்து மின்சார ரயிலில் ஏறிய மணி, பிரவீணுக்கு தெரியாது அதுதான் கடைசி பயணம் என்று. மின்சார ரயிலில் கூட்டம் நெருக்கித்தள்ள, படியில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.
ரயில் பரங்கிமலையை தாண்டி பழவந்தாங்கலை நெருங்கியபோது எதிர்பாரத விதமாக அந்த விபத்து ஏற்பட்டது. சிக்னலை சரி செய்ய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏணியில் பிரவீண் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பை சிக்கியது. இதில் தடுமாறி கீழே விழுந்தார் பிரவீண்.
சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஏணி லேசாக திரும்பவே, ரயிலில் தொங்கியபடி பயணித்த 7 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரவீண், மணி ஆகியோரின் உடல்கள் துண்டாகின. இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மதுசூதனன் என்றும், தாம்பரத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரின் பெயர் தெரியவில்லை. சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த 3வது நபரின் பெயரைப் பற்றிய தகவலும் வெளியாகவில்லை.
மின்சார ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று விபத்து நடந்த இடத்தில் மட்டும் இதுவரை 11 விபத்துக்கள் நடந்துள்ளதாக பழவந்தாங்கல் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.