கையேந்த மனமின்றி பசியோடு போராட்டம்... சாலையிலேயே உயிர்விட்ட கால்பந்தாட்ட வீரர்...
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே பசி கொடுமையால் கால்பந்து விளையாட்டு வீரர் நான்கு வழிச்சாலையில் மயங்கி
விழுந்து இறந்தார்.
திண்டுக்கல் தாலுகா அலுவலகம் சாலையில் லைன் தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான பாஸ்கரன். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என பலராலும் அறியப்பட்டவர்.
இவர் தனது விளையாட்டு மீதான ஆர்வத்தினால் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தவர். பல்வேறு போட்டிகளில் பங்குற்று வெற்றி பெற்று பரிசுகளை குவித்தவர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டதால், தனது தாயார் மாரியம்மாள், சகோதரி ஈஸ்வரி ஆகியோரின் பாதுகாப்பில் இருந்தார்.
கடந்த 30-ம் தேதியன்று ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வதாக வீட்டைவிட்டு புறப்பட்டவர் தவறுதலாக வேடசந்தூரை அடுத்துள்ள அய்யர்மடத்தில் (திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலை) இறங்கி விட்டார்.
ஆனால் மீண்டும் திரும்பிச் செல்ல பணம் இல்லாத நிலையில் யாரிடமும் கையேந்த அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் இரு நாள் பசியோடு போராடிய பாஸ்கரன் சாலை ஓரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.