ரேங்க் பட்டியல் இல்லாமல் வெளியான 10ம் வகுப்புத் தேர்வு ரிசல்ட்.. மாணவர்கள் மகிழ்ச்சி
10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. மாணவர்கள் தேர்சசி விகிதம் 92.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக, பொதுத்தேர்வு முடிவு வெளியாகும்போது, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், பாடவாரியாக முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் ரேங்க் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிடும்.
இவ்வாறு மாணவர்களைத் தர வரிசைப்படுத்துவது மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்று புகார்கள் எழுந்து வந்தன. இதனால், அதை தவிர்க்கும் விதமாக ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை இந்த ஆண்டுமுதல் ரத்து செய்யப் பட்டுள்ளது. 480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டபோதும், ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, எஸ்எஸ்எல்சி தேர்விலும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.