நாட்டிலேயே முதன்முறையாக யானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை... சத்தியமங்கலத்தில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன்முறையாகக் காயமடைந்த யானைகள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு: வனப்பகுதிகளில் காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்றி அதற்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், யானைகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ வசதி கொண்ட பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான யானைகள் உள்ளன. வறட்சியால் வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து வேளாண்மை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் அண்மைக் காலமாக அப்பகுதியிலேயே முகாமிட்டு கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், யானைகளை விரட்டும்போது மனித - விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சில சூழ்நிலைகளில் கும்கி யானைகளை வரவழைத்து கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத் துறையினர் விரட்டுகின்றனர்.
அதுதவிர, சேற்றில் சிக்கித் தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் ஆகியவற்றை மீட்க, சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாததால் விலங்குகள் உயிரிழக்கின்றன.
ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ்
இதுபோன்ற வன உயிரினங்களின் உயிரிழப்பைத் தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த வாகனம் சத்தியமங்கலம் வனச் சரக அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
யானைகளுக்கான ஆம்புலன்ஸ்
இது தொடர்பாக வனத் துறையினர் கூறுகையில், " ரூ. 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ். யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினரின் சிரமம் நீக்கம்
நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் யானைகள், கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களைத் தாக்கும் யானைகள் போன்றவற்றை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்துக்கு மாற்றும்போது வனத் துறையினர் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை போக்கவே இந்தத் திட்டம்.
10 டன் வரையுள்ள யானைகள்
இந்த ஆம்புலன்ஸில் யானைகளை ஏற்றுவது மிகவும் எளிது. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கி வைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில், 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும். மேல்தளத்தில் பாதுகாப்பு வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறை
யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்தி வைத்து, வனத் துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் வனத் துறையினரின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்தனர்.