ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. மோடியை இன்று சந்திக்கிறார்... ஷாக்கில் ஈபிஎஸ் கோஷ்டி !
அதிமுகவின் இரு அணிகள் பிளவுபட்டு கிடக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று மாலை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரமதர் மோடியை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் சந்திக்க உள்ளது ஈபிஎஸ் கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு டெல்லியின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதே நேரம், மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதற்கிடையே கடந்த வாரம் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பிரதமர் மோடியை சந்தித்து வந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று மாலை 4.15 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் உடன் மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் மோடியுடனான சந்திப்பை சாதரணமாக கருதிவிட முடியாது என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாததது ஈபிஎஸ் கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.