ஓபிஎஸ்-க்கு ஆதரவு..தேமுதிக மாஜி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்.. விஜயகாந்த் நடவடிக்கை
தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. பாபு முருகவேல் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஓபிஎஸ்-க்கு பாபுமுருகவேல் ஆதரவு தெரிவித்ததால் விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. பாபு முருகவேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. இதையடுத்து சசிகலா அணி, முதல்வர் பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது அதிமுக. சசிகலா - பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சசிகலா தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க அழைப்புவிடுக்கும்படி ஆளுநரை வலியுறுத்தி வருகிறார். சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இதனால் அரசியல் சூழல் மணிக்கு ஒரு முறை மாறி வருகிறது.
சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. பி.ஆர். சுந்தரம், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திருவண்ணாமலை லோக்சபா தொகுதி எம்.பி., வனரோஜா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே அதிமுகவின் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. பாபு முருகவேல் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து தேமுதிகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் நீக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக கோபிநாதன் நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.