சொன்னதைக் கேட்காத விஜயகாந்த்.. பட்டென்று திமுகவில் சேர்ந்து விட்ட மாஜி தேமுதிக எம்.எல்.ஏ.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் கூறிய கருத்தை கேட்க மறுத்ததால் கோபமடைந்து ஒரு முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ திமுகவில் போய் இணைந்து விட்டார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்த்த அவர் கட்சியில் இணைந்து விட்டார். தேமுதிக வட்டாரத்தில் அருட்செல்வனின் ஜம்ப் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் என்ன விசேஷம் என்றால் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த்திடம் சில கருத்துக்களைக் கூறியுள்ளார் அருட்செல்வன். அட அதெல்லாம் சரியா வராதுங்க என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார் போல. உடனே கோபித்துக் கொண்டு திமுகவுக்குப் போய் விட்டார் அருட்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தனது கட்சியின் முன்ணியினருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த விவாதத்தின்போது மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வனும் கலந்து கொண்டு சில கருத்துக்களைக் கூறினாராம். ஆனால் அதை விஜயகாந்த் ஏற்கவில்லை.
இதையடுத்து இன்று தனது ஆதரவாளர்களான தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் த.லோ.பரமசிவம், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.ஜெயபிரகாஷ் ஆகியோருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அருட்செல்வன்.
பரவாயில்லையே கட்சி தாவுவதற்கு எப்படியெல்லாம் ஐடியா கிடைக்குது பாருங்க நம்மாளுங்களுக்கு!