திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலமானார்
திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
தஞ்சை: திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோ.சி.மணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 87.
தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி. மணி (வயது 87). தி.மு.க. வில் முக்கிய பங்கு வகித்த கோ.சி.மணி, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்திலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோ.சி.மணி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.