வாசன் கட்சிக்கு பெருகுகிறது ஆதரவு... முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், அதிமுக கவிஞர் இளந்தேவன் இணைந்தனர்!
சென்னை: ஜி.கே.வாசன் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த கவிஞர் இளந்தேவன் உள்ளிட்டோர் வாசனைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இணைந்தனர்.
கவிஞர் இளந்தேவன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக பல அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுத்தவர், ஆஸ்தான அறிக்கை தயாரிப்பாளர் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
சென்னையில் நேற்று நடந்த வாசன் கட்சியின் தொழிலாளர் அணி ஆலோசனைக் கூட்டத்தின்போது கிருஷ்ணனும், இளந்தேவனும் வாசனை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து இணைந்தனர்.
நேற்றைய நிகழ்ச்சியின்போது நூற்றுக்கணக்கனோர் திரண்டு வந்து வாசனைச் சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் தங்களை வாசன் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதேபோல 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஜிகே.வாசன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அனுராதா அபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.