திமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்- கருணாநிதி, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 1989, 1996 ஆண்டு தேர்தலில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் சற்குணபாண்டியன். திமுக மேடைகளில் இளம் பேச்சாளராக அறிமுகமானார்.
1989-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார். 1996 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சமூகநலத்துறை அமைச்சரானார்.
திமுகவில் மகளிர் அணி துணை செயலாளர், மாநில செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். மகளிர் ஆணையத்தின் தலைவராகவும், பொறுப்பு வகித்த அவர் தற்போது துணை பொதுச்செயலாளராக இருந்தார்.
இதய அறுவை சிகிச்சை செய்த அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சற்குணபாண்டியன் காலமானார். அவரது ராயபுரம் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த சற்குணபாண்டியனுக்கு பொன்பாண்டி, முத்துசோழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முத்துசோழனின் மனைவி சிம்லா, அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
சற்குண பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் 3 நாட்களுக்கு திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி, ஸ்டாலின் அஞ்சலி
சற்குண பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சற்குண பாண்டியன் சிறு வயது முதலே தனது பேச்சாற்றல் மூலமாக கட்சி பணியில் ஈடுபட்டார்.
சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், மகளிர் அணி செயலாளராகவும் கடைசி காலம் வரை கட்சிக்காக பாடுபட்டவர். அவருடைய மறைவு தி.மு.க.வினருக்கும், மகளிர் சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.