சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக மாஜி ராஜ்யசபா எம்.பி, 4 எம்.எல்.ஏக்கள் போட்டி!
சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பாலகங்கா மற்றும் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. அக்டோபர் 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
சைதை துரைசாமிக்கு வாய்ப்பு மறுப்பு
இதில் மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்களாக போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உட்பட 8 சிட்டிங் மேயர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.
மாஜி ராஜ்யசபா எம்.பி
சென்னை மாநகராட்சிக்கான 200 வார்டுகளில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பாலகங்கா 78-வது வார்டில் போட்டியிடுகிறார். மேலும் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பிரபாகரன், கந்தன்
சென்னை மாநகராட்சியின் 80-வது வார்டில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ-வும் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளருமான கே.பி.கந்தன் 184-வது வார்டில் போட்டியிடுகிறார்.
வெங்கட்ராமன், குப்பன்
முன்னாள் எம்எல்ஏ-வும், ஆலந்தூர் பகுதிச் செயலாளருமான வி.என்.பி.வெங்கட்ராமன் 166-வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் 7-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். எம்பி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கும் போட்டியிடுவது அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.