அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி உடல்நலக்குறைவால் காலமானார்
முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி வயது முதிர்வினால் காலமானார். நீரியல் வல்லுநராகவும் திகழ்ந்தார் வா.செ. குழந்தைசாமி.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவால் காலமான வா.செ. குழந்தைசாமியின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவரான இவர், இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு 'குழந்தைசாமி மாதிரியம்' எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் வா.செ. குழந்தைசாமி.
வா.செ. குழந்தைசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சென்னையில் தமது 87வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.