”ஃபாக்ஸ்கான்” முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி – 11 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!
சென்னை: சென்னை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் இழப்பீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாக்ஸ்கான் கம்பெனி செல் போன்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து சப்ளை செய்து வந்தது.
இந்நிலையில், நோக்கியா கம்பெனி மூடப்பட்டதால் இந்த கம்பெனிக்கான ஆர்டர் நின்றுவிட்டது. மேலும் மற்ற இடங்களில் இருந்து வரும் ஆர்டர்களும் குறைந்ததால் கம்பெனியை மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கம்பெனி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. கம்பெனியை திறக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்தது.
இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 11 ஆம் நடக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.