திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி... மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு!
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் திருநங்கைகளுகு இலவசமாகக் கல்வி அளிப்பதாக அறிவித்துள்ளது.
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்க உள்ளதாக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளது அனைத்து திருநங்கைகளிடமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், நெல்லையில் திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக 'மாற்றத்தை நோக்கி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழக துணைவேந்தர் பாஸ்கர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய அவர், திருநங்கைகள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவர்களுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில், இலவசமாகக் கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து சுவாதி என்ற திருநங்கை கூறும்போது, ''நான் பிஎஸ்சி விலங்கியல் படித்தேன். அதை படிப்பதற்கு பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது இந்த அறிவிப்பால் என் கனவு நனவாகும். நான் மனோன்மணியம் பலகலைகழகத்தில் எம்.எஸ்.சி விலங்கியல் படிப்பேன்'' என நம்பிக்கையுடன் கூறினார்.
பிரித்திகா யாசினி என்ற திருநங்கை அண்மையில் பல போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக பதவி பெற்றது குறிப்பிடத்தகக்கது.