நெல்லையில் கைதான சுபஹானியிடம் பாரிஸ் குண்டு வெடிப்பு தொடர்பாக பிரான்ஸ் போலீஸ் விசாரணை?
திருநெல்வேலி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், கடந்தாண்டு நவம்பரில், 100 பேரை பலிவாங்கிய பயங்கரவாதிகளை பற்றிய தகவல், தமிழகத்தில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதிக்கு தெரியும், என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள், நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.
மத்திய பாதுகாப்பு படை ஏஜன்சிகளின் உதவியுடன், தமிழகத்தின் திருநெல்வேலி அருகே, கடையநல்லூரில் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சுபஹானி ஹாஜா மொய்தீன் கைது செய்யப்பட்டார்.
சுபஹானி, சமூக வலைதளங்கள் மூலம், ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது தெரியவந்தது. இவர் நாடுமுழுவதும் பிற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, கேரளாவில் சில நீதிபதிகளையும், வெளிநாட்டு பயணிகளையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்தாண்டு ஏப்ரலில், சென்னையிலிருந்து துருக்கி சென்ற சுபஹானி, பாகிஸ்தான், ஆப்கன் நாடுகளை சேர்ந்த பிற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக் பகுதிக்கு சென்று அங்கு அப்டெலாமித் அபாவுட், சலா அப்தெஸ்லாம் ஆகிய பயங்கரவாதிகளை, சுபஹானி சந்தித்து பேசியுள்ளான்.
இவர்கள் தான், பின்னர், பாரிசில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி, 100 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள். இவர்களில், அபாவுட், பிரான்ஸ் போலீசாரால் கொல்லப்பட்டான்.
அப்தெஸ்லாம், பிரான்ஸ் போலீசில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சுபஹானி குறித்து, டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துாதரக அதிகாரிகளுக்கு, என்.ஐ.ஏ.அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று, சுபஹானியிடம் விசாரணை நடத்துவர் எனத் தகவல்கள் கூறுகின்றன.
பாரிஸ் குண்டு வெடிப்பு தொடர்பா சுபஹானியிடம் விசாரணை நடத்த பிரெஞ்ச் போலீஸ் வருகை தர உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.